Rinku Singh Basic Education Officer: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் அவரது சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடிப்படை கல்வி அதிகாரியாக (Basic Education Officer) நியமிக்கப்பட உள்ளார். இதற்கான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சமாஜ்வாடி கட்சியின் எம்பி பிரியா சரோஜனுடன் ரிங்கு சிங்கிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது, நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் இந்த அரசு பணியில் ரிங்கு சிங் சேர உள்ளார். கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய பங்கிற்காக கௌரவ பதவியாக இந்த அடிப்படை கல்வி அதிகாரி பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: 2024 டி20 உலக கோப்பையை வெல்ல இவர்தான் காரணம்.. மனம் திறந்த ரோகித் சர்மா!
ஐபிஎல்லில் கலக்கி வரும் ரிங்கு சிங்!
ஐபிஎல்லில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வருகிறார் ரிங்கு சிங். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் பல போட்டிகளை தனி ஒருவராக வென்று கொடுத்துள்ளார். அனைவரையும் கவர்ந்திருந்த ரிங்கு சிங், அதன்பிறகு இந்தியாவின் டி20 அணியில் தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மேலும் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் என்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
இந்த அடிப்படை கல்வி அதிகாரி பதவி (Basic Education Officer) சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரிங்கு சிங்கிற்கும் அவரது விளையாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் ரிங்கு சிங்கை இந்த பதவியில் நியமித்தது சில சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது. ரிங்கு சிங் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன் பிறகு முழு கவனத்தையும் கிரிக்கெட்டில் தான் செலவழித்தார். படிக்காத ஒருவருக்கு எப்படி கல்வி அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது என்று அந்த மாநிலத்தில் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
கவுரவ பதவி மற்றும் சம்பளம்
அடிப்படை கல்வி அதிகாரி (Basic Education Officer) பதவிக்கான தகுதிகள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிக்கான கல்வி தகுதி இல்லாத போதிலும் விளையாட்டு துறையில் ஆற்றிய பங்கிற்காக ரிங்கு சிங்க்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்காக ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றதன் அடிப்படையில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த பதவி மூலம் ரிங்கு சிங் மாதம் ரூபாய் 56,000 அரசு சம்பளம் பெற உள்ளார். மேலும் கூடுதலாக அகவிலைப்படி, வீட்டு வாடகை மற்றும் பயணப்படி போன்ற சலுகைகளையும் அவர் பெறுவார். கடந்தாண்டு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் டிஎஸ்பியாக (DSP) பதவி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: பும்ராவை மட்டும் நம்ப முடியாது… இந்திய அணியில் ‘சிஎஸ்கே’ பௌலர் – பக்கா பிளான் ரெடி!