அவரது பேட்டிங்கை இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கூட ரசிக்கிறார் – மைக்கேல் வாகன் பாராட்டு

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி எட்டிப்பிடித்து அசத்தியது.

பென் டக்கெட்டின் அபார சதத்தால் (149 ரன், 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) 82 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பென் டக்கெட் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அசத்தினார். இதனால் ஏராளமான சாதனைகளை படைத்தார். இதன் காரணமாக பல முன்னாள் வீரர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் பேட்டிங்கின் ஸ்டைலில் நிறைய அறிவியல் உள்ளதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். அதனால் களத்தில் ரிஷப் பண்டின் பேட்டிங்கை இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கூட ரசிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ரிஷப் பண்ட் விளையாடும் ஆட்டத்தில் நிறைய அறிவியல் இருக்கிறது. அவர் விளையாடும்போது பென் ஸ்டோக்ஸ் ரசிப்பதை உங்களால் பார்க்க முடியும். என்னைப் பொறுத்த வரை ஆடம் கில்கிறிஸ்ட் இந்த விளையாட்டு கண்ட சிறந்த விக்கெட் கீப்பர். ஆனால் ரிஷப் பண்ட் முற்றிலும் புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறார். தோனி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அற்புதமாக இருந்தார். ரிஷப் பண்ட் விளையாடும் ஆட்டம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு பொருந்தும் என்று நீங்கள் நினைப்பீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருந்தாது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய சாதனைகள் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை விட அற்புதமாக இருக்கிறது” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.