Ajinkya Rahane, India vs England Test : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சுப்மன் கில் ஆகியோரை முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சிக்கிறனர். முதல் டெஸ்ட் போட்டியின்போது பந்துவீச்சில் சரியான திட்டமிடல் இல்லை, பீல்டிங் படுமோசம், பவுலிங் ரொட்டேசன் சரியில்லை என வறுத்து எடுக்கின்றனர். இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ஷர்துல் தாக்கூரை திறம்பட சுப்மன் கில் பயன்படுத்த வேண்டும் என அஜிங்கியா ரஹானே கூறியுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியின்போது ஷர்துல் தாக்கூரை குறைவான ஓவர்கள் மட்டுமே சுப்மன் கில் வீச வைத்திருப்பதாகவும், அவரை அதிக ஓவர்கள் வீச வைக்கலாம் என்றும் ரஹானே தெரிவித்துள்ளார். மேலும், ஷர்துல் தாக்கூரை பும்ராவுடன் இணைந்து பந்துவீச பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல ரிசல்ட் கொடுக்கும் என்றும் ரஹானே தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிராஜ்ஜை இன்னும் திறப்பட பயன்படுத்துவதற்கு கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஹானே சுப்மன் கில்லுக்கு அறிவுரை
“இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆல்-ரவுண்டரின் பங்கு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஷர்துல் தாக்கூர் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர், வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஷர்துலிடமிருந்து அதிக ஓவர்கள் வீசுவதை நான் பார்க்க விரும்புகிறேன். இந்திய அணி ஷர்துல் தாக்கூரை சிறப்பாகப் பயன்படுத்தினால், அது மிகவும் சிறப்பாக இருக்கும். நான் அவரிடம் பார்த்தது என்னவென்றால், அவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்ய முடியும், மேலும் அவர் ஒரு விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர். ஷர்துல் முதல் மாற்றமாக பந்து வீச முடிந்தால் அல்லது அவருக்கு புதிய பந்து வழங்கப்பட்டாலும், அவர் அதை இருபுறமும் ஸ்விங் செய்ய முடியும்.”
பும்ரா – ஷர்துல் ஜோடி சரியானது
ஷர்துலை களத்தில் மிகவும் திறம்படச் செய்ய பந்துவீச்சு ஐடியாவில் சிறிய மாற்றத்தை ரஹானே பரிந்துரைத்தார். ரஹானே பேசும்போது, “டியூக்ஸ் பந்து வழக்கமாக 10 அல்லது 12 ஓவர்களுக்குப் பிறகு மாறத் தொடங்குகிறது. அதனால் ஆரம்பத்தில் பும்ராவுடன் ஷர்துல் பந்து வீசத் தொடங்கினால், சிராஜ் இன்னொரு மாற்றமாக கொண்டு வர முடியும், அது சிறப்பாக இருக்கும். ஷர்துல் அதிக ஓவர்கள் வீசுவதை நான் பார்க்க விரும்புகிறேன். “அந்த சுதந்திரத்தை அவருக்குக் கொடுங்கள், அவர் உங்களுக்கு அதிக விக்கெட்டுகளைப் பெறுவார்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: சஞ்சு சம்சனுக்காக 2 வீரர்களை விட்டுக் கொடுக்கும் சிஎஸ்கே! தோனி தான் காரணம்?
மேலும் படிங்க: IND vs ENG: கம்பீர் தலையின் மேல் தொங்கும் கத்தி? 2வது டெஸ்டில் அதிரடி மாற்றங்கள்!