சென்னை: நிதித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது.
தமிழக நிதித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு லேசான நெஞ்சுவலி இருந்ததால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த வாரம் ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் கடந்த 26-ம் தேதி அனுமதியானார். இதய அடைப்பை நீக்கும் வகையில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது.
இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, “ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகு, உதயச்சந்திரன் நலமாக உள்ளார். விரைவில் வீடு திரும்புகிறார். சில நாட்களுக்கு வீட்டில் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்’’ என்றனர்.