ஈரான் உச்ச தலைவர் கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன் – டிரம்ப்

வாஷிங்டன்,

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. அதேவேளை, மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்கா 21ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. 12 நாட்கள் நடந்த மோதல் 24ம் தேதி முடிவுக்கு வந்தது.

இதனிடையே, இந்த போருக்குப்பின் முதல் முறையாக ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், போரில் வெற்றிபெற்றுவிட்டோம். போரில் அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம். கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படைத்தளத்தை தாக்கினோம்’ என்றார்.

இந்நிலையில், போரில் வெற்றிபெற்றுவிட்டோம் என்று ஈரான் உச்ச தலைவர் கமேனி கூறிய நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், போரின்போது அயதுல்லா கமேனி எங்கு பதுங்கி இருந்தார் என்பது எனக்கு தெரியும். அவர் இஸ்ரேலால் படுகொலை செய்யப்படுவதில் இருந்து காப்பாற்றினேன். கடந்த சில நாட்களாக ஈரான் மீதான பொருளாதாரத்தடைகளை நீக்குவது குறித்து ஆலோசித்தேன். ஆனால், கமேனியின் கோபம், வெறுப்பு பேச்சு ஆகியவற்றால் பொருளாதாரத்தடைகளை நீக்கும் முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.