ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் தொலைதூர பசந்த்கர், பிஹாலி வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
இதில் 4 தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். வனப் பகுதிக்குள் சிக்கிய எஞ்சிய 3 பேர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஜம்மு போலீஸ் ஐஜி பீம் சென் துதி கூறுகையில், “இந்த 4 தீவிரவாதிகளும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்களை கடந்த ஓராண்டாக தேடி வந்தோம். மோசமான வானிலைக்கு மத்தியில் அங்கு மோதல் நடைபெறுகிறது” என்றார்.
காஷ்மீரில் வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் பிஹாலி’ எனப் பெயரிப்பட்டுள்ளது.