திமுக இனி தமிழகத்துக்கு வேண்டாம் என்பதே எங்கள் கூட்டணியின் நிலைப்பாடு என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
நெல்லை சுத்தமல்லி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு திமுக இனி வேண்டாம் என்பதை எங்கள் கூட்டணியின் நிலைப்பாடு. இதை மக்கள் பிரதிபலிப்பார்கள். நிச்சயம் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. டாக்டர் ராமதாஸை, செல்வப்பெருந்தகை சந்தித்தது குறித்து கருத்து கூற முடியாது. அதேநேரத்தில், இந்த சந்திப்பு எதிர்கால அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
பாஜகவின் தேசியத் தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், தேசிய, மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் ஆதிராவிட நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 96 ஆயிரம் குழந்தைகள் படித்த நிலையில், தற்போது 67 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே படிக்கிறார்கள். ஆசிரியர் பற்றைக்குறையால் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுதான் திராவிடம் மாடல் ஆட்சி.
கூட்டணியில் உள்ளவர்களிடமும் மனமாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதேநேரத்தில், நான் எப்போதும் ஒரே மனநிலையில்தான் இருக்கிறேன். ஆதீனங்கள் முதல்வரை சந்தித்துப் பேசியது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் தெரிவித்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணி தாக்கப்படுகிறார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.