`திட்டங்களுக்கும் பெண்களுக்கும் இடையே இடைவெளி; பாலம் போடும் விகடன்!' விருதுநகரில் விழிப்பு உணர்வு!

அவள் விகடன் இதழ், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய ‘பெண்ணால் முடியும்’ பெண்கள் சுயமுன்னேற்ற திருவிழா இன்று சிறப்பாக நடந்தது.

பவர்டு பை ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் மற்றும் சத்யா ஏஜென்சீஸ். அசோசியேட் ஸ்பான்சர் STRI நிதி நிறுவனம், ஹைஜின் பார்ட்னர் பெல்லா – பெண்களுக்கான ஆரோக்கியப் பொருள்கள் நிறுவனம், கிஃப்ட் பார்ட்னர்ஸ் சௌபாக்யா கிச்சன் அப்ளயன்சஸ், கயல் அக்ரோ ஃபுட்ஸ், சக்தி மசாலா மற்றும் சேவரைட் பாஸ்தா.

விழா மேடையில்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் நடந்த இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஐ.ஏ.எஸ், விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும், சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையருமான முனைவர் ஜெயசீலன் ஆகியோர் தலைமை வகிக்க ஆயிரக்கணக்கான பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பேசும்போது, “பெண்களின் வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்துக்கு மாநில அரசும், மத்திய அரசும் பல திட்டங்களை வழங்குகின்றன. அதே நேரம், பெண்களுக்கும் திட்டங்களுக்கும் இடையில் ஓர் இடைவெளி இருக்கிறது. அதனை இணைக்கும் பாலம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு பாலத்தை அமைக்கும் விகடன் குழுமத்திற்கு நன்றி” என்று கூறி சிறப்புரை ஆற்றினார்.

விழா அரங்கம்

சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையர் வீ.ப.ஜெயசீலன் பேசும்போது, “பெண்களுக்கு இருக்கக்கூடிய வலிமையை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அதில் இடைவெளி இருக்கிறது என நாம் தொடர்ச்சியாகப் பேசி வருகிறோம்.

பெண்கள் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தக்கூடிய விழிப்புணர்வு இங்கு இல்லை. அதை கொடுக்க வேண்டியது முக்கியம். அதனை விகடன் குழுமம் இன்று செய்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கான மிக முக்கியமான வலிமை, பொருளாதார சுதந்திரம். அது உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என்று ஊக்கமூட்டினார்.

சாதனைப் பெண்களுக்குப் பாராட்டு

குடும்ப நல நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் பேசும்போது, “பெண்களின் தன்னம்பிக்கை என்பது கல்வியும், அதன் மூலம் வரும் வேலையும் தான். தன் ஊதியத்தில் நூறு ரூபாய் செலவு செய்ய யாரிடமும் அனுமதி கேட்காமல் வாழ்வதுதான் பொருளாதார சுதந்திரம். பெண்கள் மாதத்தின் முதல் நாளை ‘சேமிப்பு முதல்‘ என்பதாக வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதனை கூட்டு வட்டி முறையில் சேமிக்க வேண்டும். அதிக வட்டி தருவதாகச் சொல்லும் திட்டங்களில் முதலீடு செய்யக்கூடாது. ஆடம்பரச் செலவுக்காக கடன் வாங்கக் கூடாது” என்று வழிகாட்டினார்.

நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து பேசும்போது, “விருதுநகர் போன்ற சிறு நகரங்களில் இதுபோன்ற பெண்களுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சியை நடத்தும் அவள் விகடனுக்கு நன்றி. பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள், சிரிக்க நேரம் ஒதுக்காதவர்கள் மருத்துவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும், சிரித்து வாழ்பவர்கள் நீண்டகாலம் வாழ்வார்கள்” என்று கூறி தனது நகைச்சுவை பெர்ஃபார்மன்ஸை எடுத்துவிட, ஆர்ப்பரித்தது அரங்கம்.

தொடர்ந்து, பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர் ஜெயஶ்ரீ ஷர்மாவும், பெண்களின் சட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழக்கறிஞர் செல்வகோமதியும் சிறப்பாக வழங்கினார்கள்.

கல்வி, சேவை, சாகசம், சுய உதவிக்குழுக்கள் எனப் பல்துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாதனைப் பெண்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்துப் பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட, மனதில் ஏறிய தன்னம்பிக்கையுடன் விடைபெற்றனர் மகளிர்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.