லண்டன்,
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நாளை மறுதினம் லண்டனில் தொடங்குகிறது. ஜூலை 13-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடரில் யார்-யாருடன் மோதுவது என்பது நேற்று முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் 1’ வீரர் இத்தாலியின் ஜானிக் சின்னர் தனது முதல் சுற்றில் சக நாட்டவரான லுகா நார்டியை சந்திக்கிறார். முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) முதல் ரவுண்டில் 40-ம் நிலை வீரரான அலெக்சாண்ட்ரே முல்லருடன் (பிரான்ஸ்) களம் காணுகிறார்.
இதில் நடப்பு சாம்பியனான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), முதல் சுற்றில் இத்தாலியின் பாபியோ போக்னினியை எதிர்கொள்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் 1’ வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) முதல் சுற்றில் தகுதி நிலை வீராங்கனை கனடாவின் கார்சன் பிரான்ஸ்டினுடன் மோதுகிறார். கோகோ காப் முதல் ரவுண்டில் உக்ரைனின் டயானா யாஸ்டிரிம்ஸ்காவையும், ஸ்வியாடெக், ரஷியாவின் குடெமித்தோவையும் சந்திக்கிறார்கள்.