‘நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு!’
பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவர் பேசியிருந்தார்.

நயினார் நாகேந்திரன் பேசியதாவது, “ஊடகங்கள் எங்களின் கூட்டணியைப் பற்றி மட்டும் பேசுகிறீர்கள். விசிகவுக்கு எத்தனை சீட்டுகள் கொடுப்பீர்கள் என முதல்வரிடம் கேட்கிறீர்களா?
மதிமுகவுக்கு மனமாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. திமுக தமிழகத்துக்கு வேண்டாம் என்பதுதான் எங்களின் கோஷம்.
தமிழகத்தில் தினசரி வன்கொடுமை சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழகம் முழுவதும் போதைப் பொருள் சூழ்ந்திருக்கிறது.
இதுதான் இவர்களின் ஆன்மீக அரசியலா? ஸ்டாலின் சொல்லிதான் செல்வப்பெருந்தகை ராமதாஸைச் சந்தித்தாரா இல்லையா என்பதை யூகத்தின் அடிப்படையில் சொல்ல முடியாது.

ஆனால், அரசியல் இல்லாமல் எந்தச் சந்திப்பும் நடந்திருக்காது. இதைப் பற்றி ஸ்டாலினிடமே கேளுங்களேன். தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களே இல்லை. இதனால் மாணவர் சேர்க்கையே கணிசமாகக் குறைந்துள்ளது.
இதுதான் திராவிட மாடல் அரசா? பா.ஜ.கவின் அகில இந்திய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் மாநில நிர்வாகிகளை நியமிப்பார்கள்” என்றார்.