பிக் பாஸ் நடிகையும், பிரபல மாடலுமான ஷெபாலி ஜரிவாலா நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரழந்தார். அவரது மறைவு பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழவே, அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இறவு அவருக்கு உடல் நிலையில் சிரமம் எற்பட்ட போது, ஷெபாலியின் தந்தை மற்றும் கணவர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் ஷெபாலியின் வீட்டில் சோதனை செய்து முக்கிய ஆவணங்கள் மற்றும் ஷெபாலி பயன்படுத்தும் மருந்துகளை எடுத்துச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மருந்தில் வயதை குறைத்துக்காட்ட பயன்படும் மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள் இருந்தது. இது குறித்து போலீஸாரும் விசாரித்து வருகின்றனர். ஷெபாலி தோல் வெள்யைாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் மருந்து எடுத்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இது தவிர ஹார்மோன் மாத்திரைகளையும் பயன்படுத்தி வந்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள், வேலைக்காரர்கள், டாக்டர்கள் என 8 பேரிடம் போலீஸார் இது வரை வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். முதல் கட்ட விசாரணையில், “வீட்டில் எந்த வித சண்டையோ அல்லது வன்முறையோ நடந்ததாக அறிகுறிகள் இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் தடயவியல் நிபுணர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார்கள்” என்று போலீஸார் தெரிவித்தனர். மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
உயிரைப் பறித்ததா வயது குறைப்பு மருந்து?
ஷெபாலியின் மரணம் குறித்து போலீஸார் கூறுகையில்,”ஷெபாலி கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக வயதைக் குறைத்துக்காட்டக்கூடிய மருந்தை எடுத்து வந்துள்ளார். ஷெபாலி வீட்டில் 27ம் தேதி ஏதோ ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கான ஷெபாலி விரதம் இருந்துள்ளார். அப்படி இருந்தும் மாலையில் ஷெபாலி வயதை குறைக்கும் ஊசியை போட்டுக்கொண்டுள்ளார். இந்த மருந்துகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டாக்டர் பரிந்துரை செய்திருக்கிறார். அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் இந்த மருந்துகளை ஷெபாலி எடுத்து வந்துள்ளார். விசாரணையில் இந்த மருந்துகள்தான் ஷெபாலியின் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகுதான் இது குறித்த விபரம் தெரிய வரும்”என்று தெரிவித்தனர். 2002ம் ஆண்டு முதல் முறையாக ஷெபாலி காந்தா லகா என்ற வீடியோ ஆல்பம் வெளியிட்டார். அது பெரிய அளவில் ஹிட்டானது. அதனை தொடர்ந்து முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து நடன நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோ, பிக்பாஸ் என அனைத்து துறைகளிலும் ஷெபாலி தடம் பதித்தார். 2021ம் ஆண்டு பிக்பாஸில் பங்கேற்ற சித்தார்த் சுக்லா என்பவரும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.