புலவாயோ,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் கேஷவ் மகராஜ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்துள்ளது. கார்பின் போஷ் 100 ரன்களுடனும், மபாகா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே தரப்பில் தனகா சிவாங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய 19 வயதான லுஹான் பிரிட்டோரியஸ் 153 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் 150 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். தற்போது அவருக்கு வயது 19 வருடம் 93 நாட்கள்.
இதற்கு முன்னர் பாகிஸ்தானின் ஜாவித் மியான்டட் 19 வருடம் 119 நாட்களில் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ள பிரிட்டோரியஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.