மேலூர்: திராவிட மாடல் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகமான பெண்கள் வாக்களிக்கின்றனர் என மேலூர் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மேலூர் அருகே கொட்டாம்பட்டி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். தொடர்ந்து கொட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டப்பட்டி, சூரப்பட்டி, கருங்காலக்குடி, வஞ்சிப்பட்டி, குன்னங்குடிபட்டி, உள்ளிட்ட 10 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவியினை அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியில்அவர் பேசியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு திட்டம் மூலமும் மக்களுக்கு பயனுள்ள ஆட்சியினை முதல்வர் ஸ்டாலின் செய்துக் கொண்டிருக்கின்றார். குறிப்பாக மகளிருக்கு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் சுயஉதவி குழு கடனை தள்ளுபடி செய்ததுடன், அவற்றை திருப்பி வழங்கியுள்ளார். திராவிட மாடல் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகப்படியான பெண்கள் வாக்களித்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘தமிழகத்தில் விடுபட்டுள்ள தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உதவித் தொகையை முதல்வர் வழங்குவார்’ என்றார்.