Yash Dayal sexual harassment case : ஆர்சிபி அணிக்காக முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்வதில் முக்கிய பங்கு வகித்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள். இவர் மீது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். யாஷ் தயாளுக்கு எதிராக அந்த பெண் கொடுத்த புகாரில் ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்திலும் முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாஷ் தயாள் ஐபிஎல் 2025 வென்ற ஆர்சிபி அணியின் ஒரு பகுதியாக இருந்தார். ஆர்சிபி அணி முதல் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு, அவர் முக்கிய பங்கு வகித்தார்.
அந்தப் பெண் அளித்த புகாரில், யாஷ் தயாளுடன் ஐந்து வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினரையும் சந்தித்ததாகவும் கூறியுள்ளார். தயாள் தன்னை காதலித்தபோது மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை சுரண்டினார்’ என்று அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், யாஷ் தயாள் தன்னை அவரது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தி, ஒரு கணவனைப் போல நடந்து கொண்டார், இதன் காரணமாக அவரை நான் முழுமையாக நம்பத் தொடங்கினேன் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இப்போது தான் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த பெண் கொடுத்துள்ள குற்றச்சாட்டில் பல அதிர்ச்சிகரமான புகார்களும் உள்ளன. காவல்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் ‘ யாஷ் தயாள் மற்ற பெண்களுடனும் இதேபோன்ற தவறான உறவுகளில் ஈடுபட்டிருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. ஜூன் 14, 2025 அன்று, புகார்தாரர் பெண்கள் உதவி எண் 181-ஐ அழைத்தார். அதேபோல் முதலமைச்சர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தார். அந்த புகாரில், புகார் கொடுத்த பெண் மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், யாஷ் தயாளுடன் பகிர்ந்த சாட்டுகள், அவற்றின் ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை ஆதாரமாக கொடுத்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், யாஷ் தயாள் மீது சட்டப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதேநேரத்தில், இதுவரை கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக எந்த பொது அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்த விவகாரம் போலீஸ் விசாரணையில் உள்ளது. மேலும் வரும் நாட்களில் முழு உண்மையும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாஷ் தயாள் இன்னும் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகவில்லை. உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் வசிக்கும் யாஷ் தயாள் மீது எழுந்திருக்கும் இந்த புகார் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கும் சிக்கலாக மாறியுள்ளது.
மேலும் படிங்க: Ind vs Eng: இந்திய அணியில் இருந்து இந்த 2 வீரர்கள் நீக்கம்.. நுழையும் வேகப்பந்து வீச்சாளர்கள்!