Sugamya Bharat App : இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் சென்றடையும் வகையில் சுகம்யா பாரத் செயலி, மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இனி வரும் நாட்களில் சுகம்யா பாரத் செயலியைபயனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் சாட்பாட் தளம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகள் அனைத்தும் இந்த செயலியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
மேலும், இந்த செயலி குறித்து மத்திய அரசு கொடுத்துள்ள விளக்கத்தில், இம்மாதம் 26-ம் தேதி வரை இந்த செயலியில் மொத்தம் 14,358 பேர் பதிவு செய்துள்ளனர். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்கள் வாயிலாக 83,791 பேர் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். சுகம்யா பாரத் செயலியை தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கூகிள் பிளே ஸ்டோரிலும், ஐஓஎஸ் தளங்களுக்கான ஆப்பிள் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்யலாம் என கூறியுள்ளது.
2021-ம் ஆண்டு மத்திய சமூக நீதித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான துறையால் இந்த செயலி தொடங்கப்பட்டது. பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அமைப்புகள் முழுவதிலும் உள்ள சிக்கல்கள் குறித்து புகாரளிக்க ஏதுவாக இந்தத் தளம் செயல்படுகிறது.
சுகம்ய பாரத் ஆப்
சுகம்ய பாரத் ஆப் என்பது ஒரு கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட மொபைல் செயலியாகும், இது பொது இடங்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பம் (ICT) அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான தடைகளை புகாரளிக்க உதவுகிறது.
முக்கிய நோக்கம்: பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான தடைகளை கண்டறிந்து சரிசெய்ய உதவுதல்.அனைவருக்கும் அணுகக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான குடிமக்கள் பங்களிப்பை (Jan-Bhagidari) ஊக்குவித்தல் ஆகியவை இந்த செயலியின் நோக்கம்
எளிதான பயன்பாடு: மாற்றுத்திறனாளி மற்றும் முதியவர்களுக்கு எளிமையான வடிவமைப்பு.
AI சார்ந்த சாட்பாட் (Chatbot): உடனடி உதவி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
நேரடி அறிவிப்புகள்: DEPwD-இன் சமீபத்திய கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அணுகல் தொடர்பான சுற்றறிக்கைகள் தெரிந்து கொள்ளலாம்.
புகார் தீர்வு முறை: பயனர்கள் புகார் இருக்கும் இடத்தில் இருந்தே (Geo-Tagged) புகார் படங்களை பதிவேற்றலாம்.
ஏன் இந்த ஆப் முக்கியமானது?
இந்தியா முழுவதும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அணுகல் இல்லாத இடங்களை அடையாளம் காண இந்த ஆப் உதவுகிறது. ஒரு தடையற்ற இந்தியாவை (Barrier-Free India) உருவாக்க இந்த செயலி குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது.