சேலம்: அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து வருகிறது என்று தமாகா தலைவர் ஜிகே.வாசன் கூறினார். சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது. ஆனால், திமுகவினர் தாறுமாறாக பேசி, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். கூட்டணியின் நிலையை அமித்ஷா ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். தேஜகூ ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்பது அனைவருக்கும் தெரியும். எங்கள் நோக்கம் மக்கள் விரோத திமுகவை அகற்றுவதுதான்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது. போதைப் பொருட்கள் புழக்கத்தை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் பல்வேறு வரி, கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலத்தை இழந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.