TMC: "ஹனிமூனிலிருந்து வந்ததும் ஆரம்பித்துவிட்டார்…" – மஹுவா மொய்த்ரா 'பர்சனலை' விமர்சித்த எம்.பி

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹுவா மொய்த்ரா மற்றும் கல்யான் பானர்ஜி இடையே மீண்டும் பொதுவெளியில் மோதல் எழுந்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள கல்லூரியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாக வெளியான செய்தி மேற்கு வங்கம் மாநிலத்தில் பேச்சுபொருளாக உள்ளது. இது குறித்த கல்யாண் பானர்ஜியின் பதிவு ‘பெண் வெறுப்புடன்’ (மிஸோஜினிஸ்டிக்) இருப்பதாக மஹுவா மொய்த்ரா கூறியதுதான் சமீபத்திய சர்ச்சைக்கு காரணம்.

பானர்ஜியின் கருத்து குறித்து, “பெண் வெறுப்பு கட்சிகளைக் கடந்து இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வேறுபடுத்துவது என்னவென்றால் இத்தகைய கருத்துக்களை யார் கூறினாலும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என கல்யாண் பேனர்ஜியின் கருத்தைக் கண்டித்த கட்சியின் எக்ஸ் தள பதிவை ரீ ட்வீட் செய்து பதிவிட்டுள்ளார் மஹுவா மொய்த்ரா.

மஹுவா மொய்த்ரா குடும்பத்தைப் பிரிப்பவர்…

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மஹுவாவின் தனிப்பட்ட வாழ்க்கையை சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் கல்யாண் பேனர்ஜி.

முன்னாள் பிஜு ஜனதா தளம் நாடாளுமன்ற உறுப்பினர் பினாகி மிஸ்ராவுடனான மஹுவா மொய்த்ராவின் சமீபத்திய திருமணத்தை குறைகூறும் விதமாக,”மஹுவா ஹனிமூனிலிருந்து திரும்பி இந்தியா வந்ததும் என்னிடம் சண்டையிட ஆரம்பித்துவிட்டார். என்னைப் பெண்களுக்கு எதிரானவன் என்கிறாரே, அவர் யார்? 40 வருடம் உடன் இருந்தவரின் குடும்பத்தை உடைத்துவிட்டு இப்போது 65 வயது நபரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவர் பெண்களைக் காயப்படுத்தவில்லையா? அவர் குடும்பத்தைப் பிரித்தாரா இல்லையா என்பதை நாட்டுப் பெண்களே தீர்மானிப்பார்கள்.” எனக் கூறியுள்ளார் கல்யாண்.

kalyan banerjee
kalyan banerjee

மேலும் அவர்,”நெறிமுறைகளை மீறியதற்காக நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி., எனக்கு உபதேசம் செய்கிறார்! அவர்தான் பெண்களுக்கு மிகவும் எதிரானவர். அவருக்கு தனது எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும் பணம் சம்பாதிக்கவும் மட்டுமே தெரியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

கல்யாண் பேனர்ஜி கருத்தும் கட்சியின் கண்டமும்

கொல்கத்தாவில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்குப் பிறகு, “இதுபோன்றவர்களுடன் சுற்றிக்கொண்டிருக்கும் பெண்கள், தாங்கள் யாருடன் இருக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார் கல்யாண் பேனர்ஜி.

அவரது கருத்துக்கு பல்வேரு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அனைத்து இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தள பதிவில், கல்யாண் பேனர்ஜி கூறியவை அவரது சொந்த கருத்துகள் மட்டுமே என்றும், அது கட்சியின் நிலைப்பாடு அல்ல என்றும் தெளிவுபடுத்தியது.

“திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அவர்களது (கல்யாண்) கருத்தில் இருந்து தன்னை விலக்கிக்கொள்வதுடன், அவற்றைக் கடுமையாகக் கண்டிக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவையே மஹுவா மொய்த்ரா ரீட்வீட் செய்திருந்தார்.

மஹுவா மொய்த்ரா மற்றும் கல்யாண் பானர்ஜி இடையே மோதல் எழுவது இது முதன்முறை இல்லை. கடந்த ஏப்ரல் 4ம் தேதி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு

கொல்கத்தாவில் 24 வயது சட்டக் கல்லூரி மாணவில் கல்லூரியில் உள்ள யூனியன் அறைக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான 31 வயது நபர் மனோஜித் மிஸ்ரா அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் என்றும் மற்ற இருவரான பிரமிட் முகர்ஜி மற்றும் ஜைத் அகமது இப்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.