அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

மதுரை: ‘மடப்புரம் கோயில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா?’ என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதிமுக வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், ராஜராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் இன்று (ஜூன் 30) காலை நேரில் ஆஜராகி, மடப்புரம் காளி கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் காவலில் இறந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்தனர்.

அப்போது அவர்கள், ‘மடப்புரம் காளி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவரின் காரில் இருந்த நகைகள் திருடப்பட்டதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், கோயில் காவலரான அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது போலீஸார் அஜித்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.

இதுபோன்ற சட்டவிரோத காவல் மரணங்களை ஏற்க முடியாது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றனர்.

பின்னர் நீதிபதிகள், “கடந்த 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்குமார் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக போலீஸார் தாக்குதல் நடத்துவதை ஏற்கலாம். அவ்வாறு இல்லாமல் சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை தாக்கியது ஏன் எனத் தெரியவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றனர்.

இதையடுத்து, மடப்புரம் கோயில் காவலர் மரணம் வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் மாரீஸ்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை (ஜூலை 1) விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்​படை போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யின்​போது மடப்​புரம் பத்ர​காளி​யம்​மன் கோயில் காவலாளி உயிரிழந்​தார். இது தொடர்​பாக தனிப்​படை காவலர்​கள் 6 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். | முழு விவரம் > விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி மரணம் – காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.