பர்மிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்த பயிற்சியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ப்ரீத் பிரார் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசியது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. இந்த தொடரில் தேர்வு செய்யப்படாத அவர் இந்திய அணியின் பயிற்சியில் இணைந்தது பலரது மத்தியில் பல விதமான கேள்விகளை எழுப்பியது. அவர் பவுலிங் செய்யும் வீடியோவை பி.சி.சி.ஐ. தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தது.
இதற்கான காரணம் குறித்து ஹர்ப்ரீத் பிரார் பேசியது பின்வருமாறு:- “என்னுடைய மனைவி ஸ்வின்டன் நகரில் இருக்கிறார். அது பர்மிங்கம் நகருக்கு மிகவும் அருகில் இருக்கிறது அங்கிருந்து. இங்கே 1 – 1.5 மணி நேரத்தில் பயணம் செய்து வந்து விடலாம். சுப்மன் கில்லுடன் பேசினேன். நேற்று எனக்கு அவர் மெசேஜ் செய்தார். எனவே இங்கே (பர்மிங்காம்) சென்று பயிற்சி செய்யலாம் என்று நினைத்தேன்” என கூறினார்.