ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டம், பாஷமிலாராம் தொழிற்பேட்டையில் உள்ள மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ரசாயன ஆலையில் இன்று (திங்கட்கிழமை) இந்த விபத்து நிகழ்ந்தது. அதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, 13 பேர் இடிபாடுகளுக்கு இடையேயிருந்து மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த அனைத்து தொழிலாளர்களும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் பலர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனம் ரசாயனம் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், மருந்து சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கிறது. இந்த வெடி விபத்து மிகவும் சக்தி வாய்ந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விபத்தின்போது, சில தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த உடன் தொழிற்சாலையின் சில பகுதிகளை கரும்புகை சூழ்ந்தது. ஆலை முழுவதும் இருந்து கரும்புகை வெளியேறி வருகின்றது. உலையில் அழுத்தம் அதிகரித்ததே வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.