நடிகை மரணம்: “ஒருவரின் துயரத்தை ஊடகங்கள் ஏன் ஒளிபரப்ப வேண்டும்?" – நடிகர் வருண் தவான் வருத்தம்

சினிமா பிரபலங்களின் வாழ்க்கையின் வெளியிடப்படாத பக்கங்களை தெரிந்துகொள்வதற்கு எப்போதும் அவர்களின் ரசிகர்கள் விரும்புவார்கள். அதன் அடிப்படையில்தான், ஊடகங்கள், சினிமா பிரபலங்களின் கொண்டாட்டங்களையும், அவர்களின் சுக, துக்கங்களையும் ஊடகங்கள் செய்தியாக்குகின்றன.

ஆனால், அது சில நேரங்களில் எல்லை மீறி செல்வதை எந்தக் காரணத்துக்காகவும் அனுமதிக்க முடியாது. அதுபோன்ற ஒன்று சமீபத்தில் உயிரிழந்த பாலிவுட் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா (42) மரணத்தில் நடந்திருக்கிறது.

நடிகை ஷெஃபாலி ஜரிவாலா
நடிகை ஷெஃபாலி ஜரிவாலா

கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்த நடிகை ஷெஃபாலி ஜரிவாலாவின் உடல் அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது முதலே, அஞ்சலிக்காக வருபவர்களின் முக பாவனைகளை ஊடகங்கள் வெளியிட்டுவந்தன. இது பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும்படி இருந்தது. தனது மகளின் மரணத்தைப் பற்றி அறிந்ததும் ஷெஃபாலியின் தாயார் அழும் வீடியோ இணையத்தில் வெளியானது.

ஷெஃபாலியின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட கூப்பர் மருத்துவமனைக்கு வந்தபோதுகூட நடிகையின் கணவர் பராக் தியாகி ஊடகங்களிடம், “தயவு செய்து என்னைத் தனியாக விட்டுவிடுங்கள். என்னைப் பதிவு செய்வதை நிறுத்துங்கள்” எனக் கெஞ்சினார்.

தனது மனைவியின் இறுதிச் சடங்குகளைச் செய்த பிறகு, நடிகர் பராக் தியாகி மீண்டும் ஒருமுறை ஊடகங்களிடம் கைகளைக் கூப்பி, “ஷெஃபாலியை பிரார்த்தனைகளில் நினைவுபடுத்துங்கள். இதை ஒரு நாடகமாக மாற்ற வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அவரைப் பற்றிய செய்திகளை, கதைகளை தயவுசெய்து இப்போதே நிறுத்துங்கள்” என்றார்.

வருண் தவான்
வருண் தவான்

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் வருண் தவான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒரு பிரபலத்தின் மரணத்தை செய்தியாக வெளியிடும்போது ஊடகவியலாளர்கள் கொஞ்சமாவது உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பவர்களாக இருக்க வேண்டும். மீண்டும், ஊடகங்களால் உணர்ச்சியற்ற முறையில் கையாளப்பட்ட ஒரு ஆன்மாவின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

ஒருவரின் துயரத்தை நீங்கள் ஏன் காட்சிப்படுத்த வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. இது யாருக்காவது பயனளிக்கிறதா? எல்லோருக்கும் இதனால் மிகவும் சங்கடம்தான் ஏற்படுகிறது. எனவே, ஊடகங்களில் உள்ள எனது நண்பர்களுக்கு எனது வேண்டுகோள், ஒருவர் தங்கள் இறுதிப் பயணத்தை இப்படிக் காட்சிப்படுத்த விரும்பமாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.