சென்னை: ராமதாஸூடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சி.கே.பெருமாளின் 80-வது பிறந்த நாளையொட்டி, ‘உள்ளிக்கோட்டை டூ செங்கோட்டை’, ‘அரசியலில் 60 ஆண்டுகள்’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பேரவைத் தலைவர் அப்பாவு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் மற்றும் சி.கே.பெருமாள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸூடனான சந்திப்பை அன்புமணி விமர்சித்துள்ளார். சமூக நீதிக்காக யாரெல்லாம் போராடுகிறார்களோ அவர்கள் மீது பாசமும் மதிப்பும் எனக்கு உண்டு.
மரியாதை நிமித்தமாக சந்திப்பை அவர் அரசியலாக்குவது வேதனை. ராமதாஸ் மீது உண்மையான அன்பு எங்களுக்கு இருக்கிறது. அவர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்திருக்கிறார். இந்தக் கூட்டணியில்தான் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி இருக்கிறார். திமுகவின் சூழ்ச்சி என அன்புமணி விமர்சித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளது. கடந்த தேர்தலை காட்டிலும் நடைபெற உள்ள தேர்தலில் 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெறுவோம். அப்படி இருக்கும்போது அரசியல் கணக்குக்காகவா போய் சந்திப்போம். ராமதாஸின் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் பலமுறை போராட்டங்களை நடத்தி கைதாகி இருக்கிறோம். இதெல்லாம் அன்புமணிக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்போது அவர் படித்துக் கொண்டிருப்பார். ராமதாஸ் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை.
அன்புமணி மிகவும் நல்லவர். அவர் மதவாத சக்தியுடன் சேர்ந்திருப்பதால் அப்படிதான் பேசுவார். கூட்டணியில் எந்தக் கட்சியை சேர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். விசிகவும் பாமகவும் 2011 தேர்தலில் ஒரே கூட்டணியில் இருந்தார்கள். அதன்பிறகு கடலூர், விழுப்புரம் பகுதியில் இரு கட்சிகளுக்கு இடையிலான மோதல் குறைந்திருக்கிறது. மீண்டும் ஒரே கூட்டணியில் வருவதில் எந்த பிரச்சினையும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டணிக்கு அச்சாரமா? – 2026 சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என தேமுதிக அறிவிக்காத நிலையில் காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கே.எல்.சுதீஷ் பங்கேற்றதும், நிகழ்ச்சியில் பேசும்போது எனது குடும்பமும், கேப்டன் குடும்பமும் தொடக்கத்தில் காங்கிரஸ் குடும்பம்தான் என பேசியிருப்பதும், அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.