Chennai Super Kings: ஐபிஎல் 18வது சீசன் (IPL 2025) நிறைவடைந்து இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையவில்லை. ஆனால் அதற்கு ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் குறித்த பேச்சுகளும், வீரர்கள் டிரேடிங் குறித்த பேச்சுகளும் தற்போது கிசுகிசுக்க தொடங்கிவிட்டன எனலாம்.
வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுகிறது. இதற்கு முன் வீரர்கள் டிரேடிங் நடைபெறும். அந்த வகையில், சிஎஸ்கே – ராஜஸ்தான் அணிகள் (CSK RR Trading) இடையே டிரேடிங் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனான சஞ்சு சாம்சன் அந்த நிர்வாகத்துடனும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடனும் பிணக்கு ஏற்பட்டதால் அணியில் இருந்து வெளியேற விரும்புவதாக கூறப்பட்டது. இதனை அடுத்து, சஞ்சு சாம்சன் (Sanju Samson) சிஎஸ்கேவுக்கு செல்ல இருப்பதாகவும், சிஎஸ்கே – ஆர்ஆர் இதுதொடர்பாக டிரேடிங் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
சஞ்சுவுக்காக தூபே மற்றும் அஸ்வினை சிஎஸ்கே ராஜஸ்தானுக்கு கொடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும், சஞ்சு சாம்சன் தற்போது அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியோடு பயிற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது நடக்குமா நடக்காதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும் சிஎஸ்கே அணிக்கு கேப்டன்ஸியும் ஓப்பனிங்கிலும் பிரச்னைகள் இருக்கின்றன. ஒருவேளை சஞ்சு சாம்சன் சிஎஸ்கே உள்ளே வந்தால் கேப்டன்ஸி மற்றும் ஓப்பனிங் பிரச்னை தீரலாம். ஒருவேளை வராவிட்டால் சிஎஸ்கே குறைந்தபட்சம் சிறந்த பேட்டரையாவது ஏலத்தில் எடுக்க நினைக்கும். தற்போது ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கேவின் பிரதான ஓப்பனராக உள்ளார்.
டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய இரண்டு வெளிநாட்டு ஓப்பனர்களை வைத்துக்கொண்டு சிஎஸ்கே கடந்த சீசனில் கடுமையாக திணறியது. சிஎஸ்கே ஓப்பனிங்கில் சரியாக விளையாடாவிட்டால் அந்த சீசன் சொதப்பல்தான் என்பதே வரலாறாக உள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே கடந்த சீசனில்தான் சிஎஸ்கே முதல்முறையாக 10வது இடத்தில் நிறைவு செய்திருக்கிறது. இப்படியோடு நிலையில் இருந்து வந்த கோப்பையை அடிக்க சிஎஸ்கே ஓப்பனிங்கில் அனுபவம் உள்ள ஒரு வீரரை வைத்தாக வேண்டும்.
இந்நிலையில், அந்த இடத்திற்கு பாப் டூ பிளெசிஸ் (Faf Du Plesis) இப்போதும் சரியான வீரராக இருப்பார். சிஎஸ்கேவுக்கு பல ஆண்டுகளாக சேவை ஆற்றிய பாப் டூ பிளெசிஸ் 2022ஆம் ஆண்டில் ஆர்சிபிக்கு சென்றார். அங்கு 3 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், 2025 சீசனில் டெல்லி அணிக்கு சென்றார். இந்த சீசனில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். டெல்லி அணியில் டூ பிளெசிஸ் தவிர கேஎல் ராகுல், அபிஷேக் பொரேல், பிரேசர் மெக்கர்க் உள்ளிட்ட ஓப்பனிங் வீரர்களை அடுக்கடுக்கி கொண்டே போகலாம்.
40 வயதான டூ பிளெசிஸை அணியில் வைத்திருந்தால் நிச்சயம் பிளேயிங் லெவனிலும் இடம் கொடுக்க வேண்டும். அவரை பெஞ்சில் வைத்திருப்பதும் சரியாக இருக்காது. அவரை அடிப்படை விலையான ரூ.2 கோடியில் டெல்லி எடுத்திருந்தாலும் வேறு ஓவர்சீஸ் வீரர்களை எடுக்கும் நோக்கில் இவரை மினி ஏலத்தில் விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை டூ பிளெசிஸை டெல்லி விடுவித்தால் நிச்சயம் சிஎஸ்கே அவரை கொக்கிப் போட்டு தூக்க திட்டமிடும்.
டூ பிளெசிஸ் தற்போது அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுகிறார். தற்போது நடைபெற்று வரும் தொடரில் அவர் 7 போட்டிகளில் 2 சதங்கள், 1 அரைசத்துடன் 317 ரன்களை எடுத்து அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 179.09 மற்றும் சராசரி 52.83 ஆக உள்ளது. SA20 தொடரிலும் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டூ பிளெசிஸ் தொடர்கிறார் என்பதால் சிஎஸ்கே மினி ஏலத்தில் டூ பிளெசிஸை தூக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரில் ஒருவரை சிஎஸ்கே கழட்டிவிடவும் அதிக வாய்ப்புள்ளது.