கோட்டயம்,
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ராமாபுரம் அருகே உள்ள குடப்புலம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 32), ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி ரஷ்மி (30). இவர் ஈராட்டுப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் 2 பேரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டு உரிமையாளர் விஷ்ணுைவ செல்போனில் அழைத்து உள்ளார். அதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து வீட்டு உரிமையாளர் நேரில் வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது, விஷ்ணு, ரஷ்மி ஆகிய 2 பேரும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து ஈராட்டுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் தம்பதி எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாடகை வீட்டில் தம்பதி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.