14 நாடுகள் மீது புதிய வரி விதிப்புகள்; டிரம்ப் அறிவிப்பு இந்தியாவின் நிலை என்ன?

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு விருந்தளித்து கவுரவப்படுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வரி விதிப்புகளை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசினார். அவர் கூறும்போது, இங்கிலாந்து மற்றும் சீனாவிடம் அமெரிக்கா ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

அவரிடம் எந்தெந்த நாடுகள் மீது வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன என்பது பற்றி கேட்கப்பட்டதற்கு, ஒவ்வொருவரிடமும் நாங்கள் பேசியிருக்கிறோம். நாங்கள் சில ஒப்பந்தங்களை ஏற்படுத்துவோம் என நான் முன்பே கூறியிருந்தேன். இதற்காக நாடுகளுக்கு நாங்கள் கடிதம் ஒன்றை அனுப்ப இருக்கிறோம் என்றார்.

இதற்கு முன் இல்லாத வகையில் சிறப்பாக நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு முதலீடும் செய்யப்பட்டு உள்ளது. அதனால், இந்த சிறந்த மற்றும் வெற்றியடைந்த நாட்டுடன் ஒன்றாக பயணிக்க வருகை தரும்படி அமெரிக்கா அழைக்கிறது என்றார்.

தொடர்ந்து அவர், இங்கிலாந்துடனும், சீனாவுடனும் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இந்தியாவுடன் ஒப்பந்தம் முடிய கூடிய நிலையில் உள்ளது என கூறியுள்ளார். இதனால், புதிய வரி விதிப்புகளுக்கான நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்காது என தெரிகிறது.

இந்நிலையில் தாய்லாந்து, மியான்மர், வங்காளதேசம், தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரி விதிப்புகளை அறிவித்து உள்ளது. இந்த வரி விதிப்புகள் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதற்காக அந்தந்த நாடுகளுக்கு கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று டிரம்ப், அவருடைய சமூக ஊடகத்தில் தெரிவித்து உள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.