சிம்லா: கடந்த மாதம்20-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது. இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் 30-ம் தேதி நள்ளிரவில் மண்டி மாவட்டம் தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.
நிலச்சரிவுக்கு முன்பு நள்ளிரவில் அங்கிருந்த ஒரு நாய் கடுமையாக குரைத்து சத்தம் எழுப்பியுள்ளது. நாய் தொடர்ந்து குரைத்ததால் அந்த சத்தத்தை கேட்டு கண்விழித்த அதன் உரிமையாளர் நரேந்திரா தனது வீட்டின் சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வருவதை பார்த்துள்ளார்.
உடனடியாக அவர் கிராமத்தினரை எழுப்பி எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த கிராமத்தில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் பல வீடுகள் தரைமட்டமாயின. சரியான நேரத்தில் நாய் குரைத்து எச்சரிக்கை செய்ததால் சியாதி கிராமத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.