டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த சொகுசு கார்: நள்ளிரவில் பயங்கர சம்பவம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் கடந்த 9-ம் தேதி நள்ளிரவு நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது சொகுசு கார் பாய்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சொகுசு காரை இயக்கிய ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 9-ம் தேதி நள்ளிரவு 1.45 மணி அளவில் வசந்த் விஹாரின் ஷிவா கேம்ப் பகுதியில் உள்ள நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர் மீது Audi சொகுசு கார் பாய்ந்தது. இதில் 8 வயது சிறுமி உட்பட நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேரும் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வசந்த் விஹார் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் அங்கு இருந்தவர்கள் காயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீஸாரிடம் நடந்ததை சொல்லி உள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொகுசு காரை இயக்கியது டெல்லியின் துவாரகாவை சேர்ந்த 40 வயதான உட்சவ் சேகர் என்பது உறுதியாகி உள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மது போதையில் காரை இயக்கியது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியுள்ளனர்.

இந்தியாவில் மது போதையில் வாகனம் இயக்கி விபத்துகள் ஏற்படும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. மும்பையில் சனிக்கிழமை அன்று மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய காவலர் ஒருவர், 75 வயது நபரை மோதியதில் அந்த நபர் படுகாயமடைந்தார். கடந்த மாதம் குருகிராமில் மது போதையில் காரை இயக்கியவர், இ-ரிக்‌ஷா மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், 4 பேர் படுகாயமடைந்தனர். மது போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.