டெஸ்ட் கிரிக்கெட்: வித்தியாசமான உலக சாதனை படைத்த துருவ் ஜூரெல்

மான்செஸ்டர்,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இப்போதும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

முன்னதாக மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் 2-வது நாளில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தபோது வலியை பொருட்படுத்தாமல் மீண்டும் களத்திற்கு வந்து அரைசதம் அடித்து அசத்தினார்.

ஆனால் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பெறாத துருவ் ஜூரெல் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அந்த வாய்ப்பில் அவர் இந்த போட்டியில் தலா 2 ஸ்டம்பிங் மற்றும் கேட்ச் செய்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ஸ்டம்பிங் செய்த மாற்று விக்கெட் கீப்பர் என்ற வித்தியாசமான உலக சாதனையை துருவ் ஜூரெல் படைத்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.