லண்டன்,
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும், லண்டன் ஓவல் பிட்ச் பராமரிப்பாளர் லீ போர்டிசுக்கும் இடையே நேற்று முன்தினம் திடீரென மோதல் ஏற்பட்டது. ஆடுகளத்தை 2.5 மீட்டர் தூரம் தள்ளி நின்று மட்டுமே பார்வையிட வேண்டும் என அவர் விதித்த கட்டுப்பாடு மற்றும் இந்திய வீரர்களின் பயிற்சி செய்த விதத்தை குறை கூறியதால் கடுப்பான கம்பீர், ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்ல தேவையில்லை. உங்களது வேலையை மட்டும் பாருங்கள்’ என்று சாடினார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய கேப்டன் சுப்மன் கில்லிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கில், ‘ஆடுகளத்தை பார்வையிடுவதற்கு பயிற்சியாளருக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் பிட்ச் பராமரிப்பாளர் ஏன் அருகில் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை என்று புரியவில்லை. ஆடுகளத்தை பார்க்க நீங்கள் ரப்பர் ஸ்பைக் ஷூ அணிந்து வந்தாலும் சரி அல்லது வெறுங்காலுடன் வந்தாலும் சரி அது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால் பிட்ச் பராமரிப்பாளர் அதை காரணம் காட்டி அனுமதிக்க மறுத்தது ஏன் என்பது தெரியவில்லை. அவரது செயல் தேவையற்ற ஒன்றாகும். முந்தைய 4 டெஸ்டுகளில் இது போன்ற பிரச்சினை எதுவும் வரவில்லை’ என்றார்.