லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வரிசையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த போட்டியிலே (4-வது டெஸ்ட்) அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இந்நிலையில் இந்த 5-வது போட்டியில் அவர் விளையாடுவது ஏறக்குறைய உறுதி ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
பல முன்னாள் வீரர்களும் தொடரின் ஆரம்பத்திலிருந்தே அர்ஷ்தீப் சிங் களமிறங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.