தொடர்ச்சியாக 15 போட்டிகளில் டாசில் தோல்வியடைந்த இந்திய அணி

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘ஆண்டர்சன் – தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது .

முன்னதாக இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிமுகம் ஆன சுப்மன் கில் 5 போட்டிகளிலும் டாசில் தோல்வியடைந்துள்ளார். இந்த டெஸ்டையும் சேர்த்து இந்திய அணி தொடர்ச்சியாக 15 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டாசில் தோற்று இருக்கிறது. இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் தொடர்ச்சியாக 12 முறை டாசை இழந்ததே அதிகபட்சமாக இருந்தது.

5 போட்டி கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில் ஒரு போட்டியிலும் டாஸ் ஜெயிக்கவில்லை. 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைத்திலும் டாசை இழந்த 4-வது இந்திய கேப்டன் ஆவார். லாலா அமர்நாத் (1948-49-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), கபில்தேவ் (1982-83-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), விராட் கோலி (2018-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக) ஆகிய இந்திய கேப்டன்களும் இதே போல் ‘டாஸ்’ துரதிர்ஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.