திடீரென வீட்டுக்குள் நுழைந்த புலி.. புத்திசாலித்தனமாக பிடித்துக் கொடுத்த தந்தை-மகள் – விருது அறிவித்த அரசு

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே முரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது மர்து கிராமம். இந்த ஊரை சோந்த புரந்தர் மஹ்டோ என்பவரது வீட்டுக்குள் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி அதிகாலை 4.30 மணி அளவில் ஒரு ஆண் புலி புகுந்துவிட்டது. அப்போது மஹ்டோ, அவரது மகள் சோனிகா குமாரி மற்றும் உறவுக்கார சிறுமி ஒருவர் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

அதிர்ஷ்டவசமாக புலி அவர்கள் தூங்கிய அறைக்குள் நுழையாமல் வேறுபக்கமாக சென்றதால், மஹ்டோ சிறுமிகளை பத்திரமாக வெளியே அழைத்து வந்தார். பின்னர் புலியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டார். அதன்பிறகு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு படையினர் வந்து 12 மணி நேரம் போராடி புலியை பிடித்து சென்றனர்.

புலியைக் கண்டதும் மிரண்டுவிடாமல் புத்திசாலித்தனமாக புலியை மடக்கிய தந்தை-மகளுக்கு வீரதீர விருது வழங்க மாநில அரசு முடிவு செய்தது. நேற்று மாநிலத்தின் 76-வது ஆண்டு வனவிழா கொண்டாடப்பட்டதையொட்டி அவர்களுக்கு வீர தீர விருதும் வழங்கப்பட்டது.

இதில் ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள காசோலை மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டது. மேலும் வனத்துறைக்கு அவர்கள் ஆற்றிய சேவைக்காக வனத்துறை சார்பில் தனியாக ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள மற்றொரு காசோலையும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.