டொராண்டோ,
மாண்ட்ரியல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவின் டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, தரநிலையில் 386-வது இடத்தில் உள்ள லாத்வியாவின் 35 வயது அனஸ்டாசியா செவஸ்தோவாவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா 6-3, 4-6, 1-6 என்ற செட் கணக்கில் செவஸ்தோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். தோல்விக்கு பிறகு ஜெசிகா பெகுலா கூறுகையில், ‘நான் சிறப்பான ஆட்டத்தை ஆடியதாக உணரவில்லை. எனது ஆட்டம் ஏற்றம், இறக்கம் நிறைந்ததாக இருக்கிறது. அத்துடன் எனது ஆட்டத்தில் தொய்வும் தெரிகிறது. இது எனக்கு கவலை அளிக்கிறது’ என்றார்.