கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது – சென்னையில் பரபரப்பு!

தனியார் மயமாக்கலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக இன்றும் காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மறுபக்கம், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மக்கள் சிரமத்துக்குள்ளாவதாகவும் தாக்கல் செய்யப்பட பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போராட்டக்காரர்கள் களைந்து செல்லுமாறும், காவல்துறை போராட்டக்காரர்களை சட்டத்திற்குட்பட்டு முறையாகக் கைது செய்யுமாறும் உத்தரவிட்டது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

அதற்கேற்றாற்போல, போலீஸாரும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே குவிக்கப்பட்டனர். காலி பேருந்துகளும் தயார் நிலையில் வரவழைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து, மாலை நான்கு மணியளவில் அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர் பாபு உள்ளிட்ட அரசுத் தரப்பு குழு, போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடையவே போராட்டம் தொடர்ந்து நீடித்தது.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

இத்தகைய சூழலில்தான், இரவு 10 மணியளவில் அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் மாளிகைக்கு வந்தார்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் 11 மணியளவில் போலீஸார் அங்கிருந்த போராட்டக்காரர்களைக் கைதுசெய்யத் தொடங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கெதிராக கோஷமிட்டபோதும் போலீஸார் வலுக்கட்டாயமாக அவர்களைக் கைதுசெய்து பேருந்தில் ஏற்றினர்.

இறுதியில் மொத்த கூட்டமும் போலீஸாரால் கலைக்கப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்கள் சென்னைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.