மும்பை,
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் சுப்மன் கில், சஞ்சு சாம்சன், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் பயிற்சியாளரான அபிஷேக் நாயர் தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்த அணியில் சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங்குக்கு இடம் அளிக்கவில்லை.
அபிஷேக் நாயர் தேர்வு செய்த அணி விவரம்: அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்ப்ரீத் பும்ரா.