இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வெற்றிகரமான தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தனது உறவை முறித்து கொண்டுள்ளார். இந்த திடீர் விலகல், ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளதுடன், தி வால் என்று அழைக்கப்படும் டிராவிட்டின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சமூக ஊடக பக்கத்தில், ராகுல் டிராவிட் அணியுடனான தனது பயணத்தை முடித்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், அணியில் ஒரு பரந்த பொறுப்பை ஏற்கும்படி நிர்வாகம் விடுத்த கோரிக்கையையும் டிராவிட் நிராகரித்துவிட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Add Zee News as a Preferred Source
Few IPL franchises are interested in getting Rahul Dravid into the setup for the 2026 season. [Cricbuzz] pic.twitter.com/GKForxuBvt
— Johns. (@CricCrazyJohns) August 31, 2025
ராகுல் ட்ராவிட் சாதனை
2024-ல் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று தந்த பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய டிராவிட், ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இதற்கு முன்னர், 2014 மற்றும் 2015-ல் அந்த அணியின் ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார். இந்த விலகலுக்குப் பின்னணியில், அணி நிர்வாகத்தின் சிந்தனை குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த தெளிவான விவரங்கள், லண்டனில் அணி உரிமையாளர் மனோஜ் படாலேவுடன் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு பிறகு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிராவிட்டின் அடுத்த இலக்கு என்ன?
டிராவிட்டின் விலகலை தொடர்ந்து, ஐபிஎல் 2026 சீசனுக்கான பயிற்சியாளர் தேடலில் அவர் ஒரு முக்கிய நபராக உருவெடுத்துள்ளார். தற்போது வெளியான தகவலின்படி, சில ஐபிஎல் அணிகள், டிராவிட்டை தங்கள் ஆதரவு ஊழியர்களின் ஒரு பகுதியாக சேர்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, டிராவிட் விலகிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் முன்னதாக சந்திரகாந் பண்டிட்டை நீக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ளது. எனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோர் அணி, இந்தியா ஏ அணி, தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனர் மற்றும் இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் எனப் பல்வேறு நிலைகளில் தனது முத்திரையை பதித்துள்ள ராகுல் டிராவிட், மீண்டும் ஐபிஎல் பயிற்சியாளர் அவதாரம் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அணியின் தற்போதைய கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ட்ராவிட் இடையே ஏற்பட்ட மனக்கசப்பே இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
About the Author
RK Spark