தொழில்நுட்பக் கோளாறு: திருச்சி – சார்ஜா ஏர் இந்தியா விமானம் ரத்து; பயணிகள் அவதி

திருச்சி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சி – சார்ஜா இடையேயான கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டதால் 176 பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை 4.45 மணிக்கு 176 பயணிகளுடன் புறப்பட்டது.

ஓடுதளத்தில் சென்றபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து பயணம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அந்த விமானம் நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விமானத்திலேயே அமர வைக்கப்பட்டனர்.

இதனால் விமானத்தில் உள்ள குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.

விமான நிறுவன பணியாளர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் அவர்கள் அனைவரும் பயணிகள் ஓய்வறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டீ. காபி போன்ற பானங்களும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

அதேவேளையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்ய முடியாதநிலை இருந்ததால் மாற்று விமானம் மூலம் பயணிகளை சார்ஜா அனுப்பும் பணிகளை விமான நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.