புதுடெல்லி: இந்தியா பாதுகாப்புப் படைகளை மேம்படுத்த 15 ஆண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் அணுசக்தி போர்க் கப்பல்கள், லேசர் மற்றும் ஏஐ ஆயுதங்களும் அடங்கும். காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
அதற்கு பதிலடியாக இந்திய பாதுகாப்பு படை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தானின் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து இந்திய பாதுகாப்புப் படைகளை மேலும் பலம் வாய்ந்ததாக மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 15 ஆண்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் நீர்மூழ்கி கப்பல்கள், அடுத்த தலைமுறைக்கான பீரங்கிகள், ஹைபர்சோனிக் ஏவுகணைகள், அதிநவீன குண்டுகளை வீசும் ட்ரோன்கள், ஏஐ தொழில்நுட்பத்தில் செயல்படும் ஆயுதங்கள், விண்வெளி சார்ந்த போர் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தை 15 ஆண்டுகளில் செய்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக இதுபோன்ற மிகப்பெரிய பாதுகாப்புத் துறை மேம்பாட்டுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தொடங்கிவிட்டது. இதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட உள்ளது.
இதற்கான திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரம்: புதிய திட்டத்தின்படி டி-72 பீரங்கிகளுக்கு பதில் ராணுவத்தில் கூடுதலாக 1,800 அடுத்த தலைமுறை பீரங்கிகள் இணைக்கப்படும். அத்துடன் மலைப் பகுதிகளில் போரிட 400 இலகு ரக பீரங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், 700 ரோபோட்டிக் தாக்குதல் ஆயுதங்கள் ராணுவத்துக்கு கிடைக்கும்.
கப்பற்படையில் புதிதாக விமானம் தாங்கி போர்க் கப்பல் இணைக்கப்படும். அத்துடன் அடுத்த தலைமுறைக்கான 10 போர்க் கப்பல்கள், அதிவிரைவாக செல்லும் சிறிய ரக போர்க் கப்பல்கள், செயற்கைக் கோள்கள், 150 தாக்குதல் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் 100 சிறிய ரக விமானங்கள் கப்பற்படைக்கு கிடைக்கும்.
21-ம் நூற்றாண்டில் எந்த அச்சுறுத்தல் வந்தாலும், அவற்றை சமாளிக்கும் வகையில் ஏஐ, தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.