சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக,, நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவரது அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளை பறித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இது தொடர்பாகஎடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன், எம்எல்ஏ இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை அதிமுக மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் ஒரே அறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த முக்கிய அறிவிப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.