துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது.
ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர். அதன்படி இந்தியாவின் முகமது சிராஜ், வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்றி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், நெதர்லாந்தின் ஐரிஸ் ஸ்வில்லிங் மற்றும் பாகிஸ்தானின் முனீபா அலி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வென்றவர்கள் விவரங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதை இந்தியாவின் முகமது சிராஜும், சிறந்த வீராங்கனை விருதை அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட்டும் வென்றுள்ளனர்.