கொழும்பு,
இலங்கையின் வடமேற்கு பகுதியில் நிகவெரட்டிய என்ற இடம் உள்ளது. தலைநகர் கொழும்பிலிருந்து 125 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் புகழ்பெற்ற புத்த மடாலயம் ஒன்று உள்ளது. இந்த மடாலயத்தில் புத்த துறவிகள் பலரும் தங்கி உள்ளனர். தியானங்களுக்கு பெயர் பெற்ற இந்த மடாலயத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் வந்து செல்வார்கள்.இந்த புத்த மடாலயத்தில் கேபிள் கார் சேவையும் உள்ளது. இந்த கேபிள் காரில் புத்த துறவிகள் பயணித்த நிலையில், அது அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் புத்த துறவிகள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்த துறவிகள் 7 பேரில் ஒரு இந்தியர், ஒரு ரஷ்யர் மற்றும் ஒரு ருமேனிய நாட்டவர் அடங்குவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்