டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை – நிபுணர்கள் கருத்து

வாஷிங்டன்,

உலக அளவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பதை ஒரு கவுரவமாக கருதுகின்றனர். இதற்காக அவர்கள் தீவிர முயற்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அதுவும் இந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த விருதை பெற வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

தான் 2-வது முறையாக பதவி ஏற்றபிறகு இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்ளிட்ட 7 போரை நிறுத்தி உள்ளேன். அதனால் எனக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெளிப்படையாக கூறி வருகிறார். எப்படியும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு தமக்கு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர அவர் திட்டமிட்டு இருந்தார். இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதன் காரணமாக அவருக்கு நோபல் பரிசு கிடைக்காது என கூறப்படுகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசு கமிட்டி குழுவினர் அமைதிக்கான நோபல் பரிசினை ஏதாவது ஒரு மனிதாபிமானம் சார்ந்து செயல்பட கூடிய அமைப்புக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பே இல்லை என வரலாற்று நிபுணர் ஆஸ்லே ஸ்லீன் தெரிவித்து இருக்கிறார்.டிரம்பின் நடவடிக்கைகள் நோபல் பரிசு அளவுகோலுக்கு எதிரானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவர் நோபல் பரிசு வெல்ல மாட்டார். அவரது கருத்து எதிர்வினையை ஏற்படுத்தும், பரிசு வழங்கும் குழு சுதந்திரமாக செயல்படுகிறது என நோபல் பரிசு கமிட்டிக் குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் டிரம்பின் நோபல் பரிசு கனவு தகர்ந்து விடும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வரும் அக்.10 அன்று அறிவிக்கப்பட உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.