வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026ல் விளையாட முடியாது? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், இளம் வீரர்கள் பங்கேற்பது குறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய மற்றும் புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதன்படி இனி 19 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட வீரர்கள், ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டுமென்றால், குறைந்தபட்சம் ஒரு முதல் தர போட்டியிலாவது ஆடியிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. இளம் கிரிக்கெட் வீரர்களை, சிறு வயதிலேயே ஐபிஎல் போன்ற பெரும் பணம் புழங்கும், அதிக அழுத்தம் நிறைந்த டி20 கிரிக்கெட்டின் வெளிச்சத்திற்குள் கொண்டு வராமல், அவர்களின் திறமையை நீண்ட வடிவிலான கிரிக்கெட்டில் வளர்த்தெடுப்பதே இந்த முடிவின் முக்கிய நோக்கம்.

Add Zee News as a Preferred Source

முடிவிற்கான காரணம் என்ன?

2008ல் ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து, பல இளம் வீரர்கள் இந்த தொடரின் மூலம் பெரும் புகழை அடைந்துள்ளனர். அந்த வகையில், 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பீகாரைச் சேர்ந்த 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் வரலாற்றிலேயே இரண்டாவது வேகமான சதத்தை அடித்து, கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார். இருப்பினும், இது போன்ற இளம் வயதில் கிடைக்கும் திடீர் புகழ் மற்றும் பண மழையால், வீரர்களின் பேட்டிங் திறன் மற்றும் மனநிலை மாறும் என்ற கவலைகள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. இந்த புதிய விதியின் மூலம், ரஞ்சி டிராபி போன்ற முதல் தர போட்டிகளில் விளையாடி, தங்களது ஆட்ட நுணுக்கங்களை செதுக்கவும், மன உறுதியை வளர்த்து கொள்ளவும் இளம் வீரர்களை ஊக்குவிக்க பிசிசிஐ விரும்புகிறது.

வைபவ் சூர்யவன்ஷியின் நிலை என்ன?

இந்த புதிய விதியால், 2026ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்த விதி அவரை கட்டுப்படுத்தாது. ஏனெனில், அவர் ஏற்கனவே பீகார் அணிக்காக ஐந்து முதல் தர போட்டிகளில் விளையாடி, இந்த தகுதியை பூர்த்தி செய்துவிட்டார். இந்த புதிய கொள்கை, அடுத்த சீசனில் இருந்து இளம் வீரர்கள் நேரடியாக ஐபிஎல்க்குள் நுழைவதை கட்டுப்படுத்தினாலும், நீண்ட கால நோக்கில் இந்திய கிரிக்கெட்டிற்கு பெரும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 19 மற்றும் 16 வயதுக்குட்பட்ட திறமையான வீரர்களுக்கு, உள்ளூர் கிரிக்கெட் அணிகள் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற பொறுப்பையும் இந்த பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது. இது, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய படியாகப் பார்க்கப்படுகிறது.

வைபவ் சூர்யவன்ஷி ரன்கள்

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், தனது 14வது வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் இளம் வயதில் அறிமுகமான வீரர் மற்றும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அந்த தொடரில், 36 பந்துகளில் சதம் அடித்து ஐபிஎல்லில் அதிவேகமாக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தினார். மேலும் செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற U-19 ஒருநாள் போட்டியில், அவர் 68 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். 2024ம் ஆண்டில், தனது 12வது வயதிலேயே பீகார் அணிக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமாகி, வரலாறு படைத்தார். ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டபோது வைபவ் சூர்யவன்ஷிக்கு 13 வயதுதான். இதுவும் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.