கரூர் சம்பவத்தில் வதந்தி: சமூக வலைதளத்தில் பதிவிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை: கரூர் சம்பவத்தை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதளப் பதிவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.

இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.