கரூர் நெரிசல் சம்பவம்: தவெக மாவட்ட நிர்வாகி மதியழகன் கைது

கரூர்: தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர போலீஸார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அதன்படி, பிரிவு 105 (கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை), பிரிவு 110 (குற்றமற்ற கொலை செய்ய முயற்சி), பிரிவு 125 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசரம் அல்லது அலட்சிய செயல்களுக்கு தண்டனை), பிரிவு 223 (பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை), பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக மதியழகன் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. புஸ்ஸி ஆனந்தையும் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.