இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடர் மற்றும் ஆசிய கோப்பைக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த முக்கிய பயணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் உள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு, மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் அணிக்கு திரும்புவதால், இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இதுவே அவர்களது ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு தொடராகவும் அமையலாம் என்று கூறப்படுகிறது.
Add Zee News as a Preferred Source

அக்டோபரில் தொடங்கும் ஆஸ்திரேலியா தொடர்
அக்டோபரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி அக்டோபர் 19ம் தேதியும், இரண்டாவது போட்டி அக்டோபர் 23 தேதியும், மூன்றாவது போட்டி அக்டோபர் 25ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும், இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு தொடங்கும். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதால், இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம்.
ரோஹித், கோலி – வாழ்வா, சாவா?
இந்த ஒருநாள் தொடர், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை 2027ம் ஆண்டு தான் நடைபெறவுள்ளது. அப்போது, ரோஹித் சர்மாவுக்கு 40 வயதும், விராட் கோலிக்கு 39 வயதும் ஆகியிருக்கும். இதனால், அவர்கள் தங்களது உடற்தகுதியையும், ஃபார்மையும் தொடர்ச்சியாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மறுபுறம், ரோஹித் ஷர்மாவின் இடத்தை பிடிக்க, ஆசிய கோப்பையின் நாயகன் அபிஷேக் ஷர்மா தயாராக உள்ளார். அதேபோல், விராட் கோலியின் இடத்திற்கு திலக் வர்மா, ராஜத் படிதார் போன்ற இளம் வீரர்கள் போட்டி போடுகின்றனர். இதனால், இந்த தொடரில் கோலியும், ரோஹித்தும் சிறப்பாக செயல்படவில்லை என்றால், அவர்கள் ஒருநாள் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட அதிக வாய்ப்புள்ளது.
கம்பீரின் திட்டம் என்ன?
இந்திய அணியின் புதிய மாற்றத்தில் முக்கியமானவராக பார்க்கப்படும் கௌதம் கம்பீர் இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, சீனியர் வீரர்களை படிப்படியாக அணியில் இருந்து நீக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சீனியர்கள், தங்களது அனுபவத்தின் அடிப்படையில், சில நேரங்களில் பயிற்சியாளரின் திட்டங்களுக்கு முரண்பட வாய்ப்புள்ளது. ஆனால் இளம் வீரர்கள், பயிற்சியாளரின் திட்டத்தை சரியாக பின்பற்றுவார்கள் என்று கம்பீர் நம்புவதாக தெரிகிறது. எனவே, இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரோடு, கோலி மற்றும் ரோஹித்தின் ஒருநாள் அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வர கம்பீர் திட்டமிடலாம் என்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
டி20 தொடர்
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிந்தவுடன், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. அக்டோபர் 29, 31 மற்றும் நவம்பர் 2, 6, 8 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகள் நடைபெறும். அதற்கு முன்பு இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கு சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
About the Author
RK Spark