இந்திய வீரர்கள் எங்களை அவமதிக்கவில்லை.. கிரிக்கெட்டைதான் அவமதித்தார்கள் – பாக்.கேப்டன் தாக்கு

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய ஆட்டங்கள் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. முதலில், பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க இந்திய அணி மறுத்தது. பின்னர், மைதானத்தில் இந்திய வீரர்களை பாகிஸ்தான் வீரர்கள் சீண்டியது, போர் விமானங்கள் செல்வது போன்று தனது கை அசைவின் மூலம் ஹாரீஸ் ரவுப் தெரிவித்தது என சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த சூழலில், நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது. அப்போது, வெற்றிக்கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை மந்திரியுமான மோஷின் நக்வி கைகளால் இந்திய அணி வாங்க மறுத்தது. அத்துடன், கோப்பை இன்றி இந்திய அணி வெற்றியை கொண்டாடியது.

இந்த நிலையில், இந்திய வீரர்கள் எங்களை அவமதிக்கவில்லை.. கிரிக்கெட்டைதான் அவமதித்தார்கள் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது;

“ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி செய்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கைகுலுக்காததால் எங்களை அவமதிக்கவில்லை, கிரிக்கெட்டைதான் அவமதித்தார்கள். ஆசியக் கவுன்சில் தலைவர்தான் வெற்றிபெற்ற வீரர்களுக்கு கோப்பையை வழங்குவார். அவரிடம் இருந்து பெறவில்லை என்றால், கோப்பையை எப்படி பெறுவீர்கள்? இதுபோன்று நடப்பதை முதல்முறையாகப் பார்க்கிறேன்.

நான் வெறும் பாகிஸ்தான் கேப்டன் மட்டுமல்ல, ஒரு கிரிக்கெட் ரசிகன். இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ ஒரு குழந்தை இதனை பார்க்கிறது என்றால், அவர்களுக்கு நாம் நல்ல செய்தியை அனுப்பவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது, இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு பரிசுத்தொகைக்கான அட்டையை வழங்கியபோது, அதை பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, மறு நொடியே அதனை வேகமாக தூக்கி வீசியது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.