கரூர்: "EPS உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து உளறுகிறார்" – தங்கம் தென்னரசு காட்டம்

கரூரில் நடந்த கொடுந்துயர் தொடர்பாக அரசு கொடுத்துள்ள விளக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார்.

அதற்குப் பதில் கருத்தாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ள பதிவில், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை அவரது பதற்றத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருக்கின்றது. எவ்வகையிலாவது இத்துயரமிகு சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று துடியாய்த் துடிப்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது.

அரசு தரப்பில் செய்தியாளர் சந்திப்பில் உண்மைகள் உணர்த்தப்படும் போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து வழக்கம் போலவே ஓர் உளறல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கரூரில் நடந்த கொடுந்துயரத்திற்குக் காரணம் என்னவென்பதை அரசு அமைத்திருக்கும் ஆணையமும், காவல்துறை விசாரணையும் முறையாக வெளிக்கொணரும் எனச் செய்தியாளர்களிடம் அரசு அதிகாரிகள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசின் எக்ஸ் பதிவு
அமைச்சர் தங்கம் தென்னரசின் எக்ஸ் பதிவு

நடைபெற்ற ஒரு பெரும் துயரச் சம்பவம் குறித்தான உண்மை நிலவரங்களை அரசின் உயர் அலுவலர்கள் நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது?

அரசின் முக்கிய அங்கமாக விளங்கும் அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் அத்தகு விளக்கங்களை செய்தியாளர்கள் வாயிலாக வெகுமக்களுக்கும் சென்றடையச் செய்வது இத்தகுச் சூழலில் அவர்களின் கடமை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தன் வசதிக்காக மறந்துவிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்” என்று விமர்சித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.