புதுடெல்லி: குஜராத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியில் உள்ள சர் கிரீக் கடல் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் அத்துமீறி செயல்பட்டால், பதிலடி கொடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் பகுதியில் சர் கிரீக் என்ற நீரிணைப்பு பகுதி உள்ளது. இது இந்தியா – பாகிஸ்தான் இடையே கடல் எல்லைப் போல் உள்ளது. இப்பகுதியின் எல்லைப் பிரச்சினை இரு நாடுகள் இடையே நீண்டகாலமாக உள்ளது. இப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா பல முறை முயன்றது. ஆனால் பலன் இல்லை.
இந்நிலையில் சர் கிரீக் பகுதியில் ராணுவ கட்டமைப்புகளை பாகிஸ்தான் விரிவுபடுத்துகிறது. இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: எல்லைப் பகுதிகளை இந்திய ராணுவமும், எல்லை பாதுகாப்பு படையும் (பிஎஸ்எப்) தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியா பதிலடி கொடுப்பது நிச்சயம். இது வரலாறு மற்றும் புவியமைப்பை மாற்றியமைக்கும். கடந்த 1965-ம் ஆண்டு போரில் இந்திய ராணுவம் லாகூர் வரை வந்து தனது திறனை நிரூபித்தது. சர் கிரீக் வழியாக கராச்சி செல்ல ஒரு வழித்தடம் உள்ளதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூரிலும், எதிரிகளின் மறைவிடத்தை அழித்து இந்தியா தனது திறனை வெளிப்படுத்தியது. நமது இறையாண்மைக்கு, உலகில் உள்ள எந்த சக்தியும் சவால் விடுக்க முடியாது. தீவிரவாதமாக இருந்தாலும், வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதை முறியடிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது லே விலிருந்து சர் கிரீக் வரை அத்துமீறும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கருவிகளை இந்திய ராணுவம் முற்றிலும் அழித்தது. இதன் மூலம், பாகிஸ்தான் மீது எங்கும் எப்போதும் தாக்குதல் நடத்தி பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை உலக நாடுகள் அறிந்தன. இந்தியாவுக்கு வலிமை இருந்தும், போர் தொடுப்பது நாட்டின் நோக்கம் அல்ல. தீவிரவாதிகள் மீது மட்டும் தாக்குதல் நடத்தி, நமது ராணுவம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டது. ஆனாலும், தீவிரவாதத்துக்கு எதிரான நமது சண்டை தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.