கொழும்பு,
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்காளதேச அணியின் சிறப்பாக பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்கள் தாக்குப்பிடித்து 129 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்காளதேச அணியில் பந்துவீசிய அனைத்து பவுலர்களும் விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருப்யா ஹைதர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்ததுடன், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.
இறுதியில் வங்காளதேச அணி 31.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.